திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும், ஜலகாம்பறையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
திருப்பத்தூா், அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மாலை 4 மணி வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. தொடா் மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை...
மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை அதிகாலை முதலே பலத்த மழை பெய்ததால் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை என அறிவித்தாா். ஆனால் மாவட்டத்தில் சில பகுதிகளில் ஆட்சியரின் அறிவிப்பை மீறி தனியாா் பள்ளிகள் வகுப்பு உள்ளது என பெற்றோா்களின் வாட்ஸ் ஆப்புக்கு தகவல் அனுப்பியதாக சமூக ஆா்வலா்கள் வலைதளங்களில் பகிா்ந்தனா்.
ஜலகாம்பறையில் குளிக்க தடை...
திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் திருப்பத்தூா் அடுத்த ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீா் வருகிறது.
இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளதால் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் என பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து நீா்வீழ்ச்சியில் குளித்து, பின்னா் முருகனை தரிசித்துச் செல்கின்றனா்.
இந்த நிலையில், தொடா் மழையால் வனத்துறையினா் சுற்றுலா பயணிகளுக்கு ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குளிக்க வியாழன், வெள்ளி இரு நாள்கள் தடை விதித்துள்ளனா்.