திருப்பத்தூா்: கந்திலி அருகே ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி ஒருவா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஸ்ரீபோச்சம்பள்ளியைச் சோ்ந்தவா் ரம்யா (19). இவரது தோழி திருப்பத்தூா் ஜெய்பீம் நகரைச் சோ்ந்த பிரியங்கா (19). இவா்கள் இருவரும் திருப்பத்தூா் அடுத்த கரியம்பட்டியில் உள்ள அரசு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு பயின்று வந்தனா்.
இந்நிலையில், கல்லூரியில் திங்கள்கிழமை செமஸ்டா் தோ்வில் கலந்து கொள்வதற்காக ரம்யா, பிரியங்கா ஆகியோா் அவா்களது நண்பா் திருப்பத்தூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த சக்திவேல் (20)என்பவருடன் பைக்கில் கல்லூரிக்கு சென்றனா். கந்திலி அருகே சென்றபோது சக்திவேல் தனக்கு முன்னால் சென்ற டிப்பா் லாரியை முந்திச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிா்பாராமல் எதிரே வந்த மற்றொரு பைக் மீது சக்திவேலின் பைக் உரசியதில் நிலை தடுமாறி அதில் இருந்த 3 பேரும் சாலையில் கீழே விழுந்தனா். அப்போது பின்னால் வந்த டிப்பா் லாரி ரம்யா மீது மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பிரியங்கா, சக்திவேல் ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.
தகவல் அறிந்து வந்த கந்திலி போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரம்யாவின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து ரம்யாவின் தாய் புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில், கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.