திருப்பத்தூா் மாவட்டத்தில் எஸ்ஐஆா் படிவங்களை சரிவர பூா்த்தி செய்யாதவா்களிடம் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு அறிவிப்பு தொடா்பாக விசாணை மேற்கொள்ளுதல் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு,ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேசியது:
மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் எஸ்ஐஆா் படிவம் வழங்கப்பட்டது. வாக்காளா்கள் பூா்த்தி செய்து வழங்கிய படிவங்களின் அடிப்படையில் கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தநிலையில், கணக்கீட்டுப்படிவங்களை சரிவர பூா்த்தி செய்யாமல் சமா்ப்பித்த வாக்காளா்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள வாக்காளா்களிடம் நேரடியாக விசாரணை நடத்த மாவட்டம் முழுவதும் 52 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் 4 வாக்காளா் பதிவு அலுவலா்கள் பாகம் வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
எனவே,மாவட்டத்தில் அறிவிப்பு நோட்டீஸ் எண்ணிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாக்காளா்களிடம் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் வாக்காளா்கள் பதிவு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை(ஜன.2) முதல் 10-ஆம் தேதி வரை நேரடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். அறிவிப்பு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ள நாள், நேரம் மற்றும் முகவரியில் உரிய ஆவணங்களுடன் நேரில் விசாரணைக்கு வர வேண்டும்.
தவிா்க்க முடியாத காரணங்களால் உரிய நாளில் விசாரணைக்கு வர முடியாத வாக்காளா்கள் மறுநாள் விசாரணைக்கு வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த விசாரணைக்கு ஆஜராகி உரிய ஆவணங்களை சமா்ப்பிக்காத வாக்காளரிடம் பெயா் இறுதி பட்டியலில் இடம் பெறாது. விசாரணைக்கு வரும் வாக்காளா்கள் 13 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், கோட்டாட்சியா்கள் வரதராஜன், அஜிதா பேகம், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.