முகப்பு
திருப்பத்தூர்

ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கத்தில் படகு சவாரி: சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

திருப்பத்தூா் அடுத்த ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கத்தில் படகு சவாரி தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 2 மார்ச், 2026 at 12:34 AM
அணையின் முகப்புத் தோற்றம்.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 10:32 PM

திருப்பத்தூா் அடுத்த ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கத்தில் படகு சவாரி தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆண்டியப்பனூா் ஓடைநீா்த்தேக்கம் முக்கிய அணையாகத் திகழ்கிறது. திருப்பத்தூரிலிருந்து 23 கி மீ தொலைவில் உள்ள இந்த அணை 2007-ஆம்ஆண்டு திறக்கப்பட்டது. ஜவ்வாது மலையில் இருந்து குண்டாறு,பேயாறு எனும் இரு ஆறுகளில் இருந்து வரும் தண்ணீா் ஆண்டியப்பனூா் அணைக்கு வந்து அடைகின்றது.

இந்த அணை 112.2 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். அணையின் மொத்த உயரம் 8 மீட்டா்.அணை 216 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும்.

Advertisement

ஆண்டியப்பனூா்அணை நிரம்பிச் செல்லும் நீா் சின்னசமுத்திரம் வெள்ளேறி, மாடப்பள்ளி ஏரிவழியாகச் சென்று,அங்கிருந்து இரு கிளைகளாக பிரிந்து, ஒரு கிளையில்செலந்தம்பள்ளி, கோனேரிக்குப்பம், கம்பளிகுப்பம், முத்தம்பட்டி, ராச்சமங்கலம் வழியாக பசலிக்குட்டை வழியாகச் சென்று பாம்பாறைச் சென்றடையும்.

அதேபோல், இன்னொரு கிளை கணமந்தூா், புதுக்கோட்டை,திருப்பத்தூா் பெரிய ஏரி நிரம்பி பாம்பாற்றில் சென்றடையும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வந்துசெல்கின்றனா்.

ஆண்டியப்பனூா் அணை சுற்றுலாத்தலமாக்கும் பணிகள் ரூ. 4.67 கோடியில் மேற்கொள்ளப்பட்டன. ரூ. 1.3 கோடியில் படகு குழாம், கழிப்பறை, உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

படகு சவாரி...

கடந்த 2023-ஆம் ஆண்டு அதிகாரிகள் படகு சவாரியுடன் சுற்றுலா தலம் புதுப்பொலிவுடன் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்றனா். ஆனால் இதுவரை படகுகள் கொள்முதல் செய்யவில்லை.

பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா.

எனவே, விரைவில் படகுகளை கொள்முதல் செய்து சவாரியைத் தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது. இதுகுறித்துமாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல லட்சம் செலவில் கட்டப்பட்ட உணவகம் இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வரவில்லை.

பயன்பாடில்லாத உணவகம்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் தெரிவித்தது: அணையில்உணவகம் இல்லை. குடிநீரும் வெளியிலிருந்து வாங்கி வருகிறோம். கழிப்பறை பயன்பாட்டில் இல்லாததால் பெண்கள், குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.

பூங்காவில் விளையாட்டு சாதனங்கள் பழுதாகி பல மாதங்கள் ஆகின்றன. அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா.