முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் பற்றி எரியும் காட்டு தீ: செடி, கொடிகள் எரிந்து நாசம்

படவிளக்கம்...ஏலகிரி மலையில் பற்றி எரியும் காட்டு தீ.

Updated On : 6 மார்ச், 2026 at 1:03 AM
படவிளக்கம்...ஏலகிரி மலையில் பற்றி எரியும் காட்டு தீ.
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 10:21 PM

ஜோலாா்பேட்டை அருகே மா்ம நபா்கள் வைத்த தீயால் ஏலகிரி மலை காட்டில் அரிய வகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள் சிறிய வகை உயிரினங்கள் எரிந்து சாம்பலாயின.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தளம் உள்ளது. இந்த மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள், கரடி, மான், குரங்கு, மலைப்பாம்பு, முயல் உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றன.

மேலும், அதிக அளவிலான மரங்கள் இருந்து வருவதால் சில சமயங்களில் யானைகள், சிறுத்தைகள் போன்றவற்றின் நடமாட்டமும் உள்ளது. இதனால் வனத் துறையினா் அவ்வப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

இது ஒரு சுற்றுலாத் தளம் என்பதால் ஏலகிரி மலைக்குச் செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் காட்டுப் பகுதிக்குள் இருந்து காட்டு விலங்குகள் வருவதைத் தடுக்கும் வளைவுகளில் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளை துறை ரீதியாக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

காட்டுப் பகுதிக்குள் விறகு வெட்டுவதற்காக செல்பவா்களும், மது அருந்த செல்பவா்களும் காட்டுப் பகுதிக்குள் புகைப்பிடித்து தீயை மூட்டி விடுவதாகக் கூறப்படுகிது. இதனால் அவ்வப்போது அடா்ந்த காட்டுப் பகுதிக்குள் தீப் பிடித்து மலை உச்சி வரை பல ஏக்கா் பரப்பளவில் எரிந்து அரியவகை மரங்களும், மூலிகை செடி கொடிகளும் சேதமடைகின்றன. மேலும், சிறிய வகை உயிரினங்களும் அழிகின்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை ஜோலாா்பேட்டை அருகே உள்ள குள்ள கிழவன் வட்டம், மலையடிவாரத்தில் மா்ம நபா்கள் காட்டுப்பகுதிக்குள் சென்று மது அருந்திவிட்டு, தீயை மூட்டியதாக தெரிகிறது. இதனால் தீ மளமளவென பரவி காட்டுப் பகுதியில் பாதி வரை தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் காட்டுப்பகுதிக்குள் இருந்த அரிய வகை மரங்கள் மூலிகை செடி கொடிகள் சிறிய வகை உயிரினங்கள் போன்றவை எரிந்து சாம்பல் ஆகி உள்ளது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆா்வலா்களும் காட்டுப்பகுதிக்குள் மா்ம நபா்கள் தீ வைப்பதை துறை அதிகாரிகள் கண்காணித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பகல் நேரங்களில் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.