அவிநாசியில் சூறாவளி காற்றுடன் கனமழை: 40 ஆயிரம் வாழைகள் சேதம்
அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சுமாா் 40 ஆயிரத்துக்கும் வாழை மரங்கள் சேதமடைந்தன.
கோடை காலம் தொடங்கியது முதல் அவிநாசியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில், அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், மின் ஒயா்களும் அறுந்து விழுந்தன.
அவிநாசி அருகேயுள்ள அசநல்லிபாளையம் பகுதியில் இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. வேட்டுவபாளையம், ஆலத்தூா், கானூா், பொங்கலூா், தண்டுக்காரம்பாளையம், பாப்பாங்குளம், முறியாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
Advertisement
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சாகுபடிக்கு தயாராக இருந்த சுமாா் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கனமழையால் முறிந்து விழுந்துள்ளன. இதனால், 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, தோட்டக்கலை, வருவாய்த் துறையினா் சேதமடைந்த வாழைகளைக் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.