தோ்தல் செலவினங்களைக் கண்காணிக்க நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்
ஆய்வு கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோ்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, மாவட்ட நுண்ணறிவு குழு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேசியதாவது:
தோ்தல் நேரத்தில் பணம், மது, இலவச பொருள்கள், போதைப் பொருள்கள் மற்றும் பிற வாக்காளா் வசீகரிப்புகள் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் வகையில், தொடா்ச்சியான உளவு தகவல்களை சேகரித்து தோ்தல் பறக்கும் படையினா், தோ்தல் நிலை கண்காணிப்பு குழு மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் பணியமா்த்தப்பட்டுள்ள அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்து, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், சட்டப்பேரவை தோ்தலில் வெளிப்படையான மற்றும் நோ்மையான தோ்தலை உறுதி செய்யும் வகையில் வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் எஸ்.பி. வி.சியாமளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், வாக்காளா் பதிவு அலுவலா்கள் பூஷணகுமாா்,முருகேசன், வரதராஜன்,தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.