முகப்பு
திருப்பத்தூர்

கட்டுமானப் பணிக்கு கொண்டு சென்ற ரூ. 80,490 பறிமுதல்: அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

வாணியம்பாடி அருகே கட்டுமானப் பணிக்காக கொண்டுச் சென்ற பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்ததால் பாதிக்கப்பட்டோா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 23 மார்ச், 2026 at 11:01 PM
வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டோா்
பகிர்:

வாணியம்பாடி அருகே கட்டுமானப் பணிக்காக கொண்டுச் சென்ற பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்ததால் பாதிக்கப்பட்டோா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

காவலூா் பகுதியை சோ்ந்த சுப்பிரமணி. இவா் தனது மகன், மனைவியுடன் வீட்டுக்கு டைல்ஸ் வாங்குவதற்கு குடியாத்தம் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் காவலூா் அருகே வட்டார வளா்ச்சி அலுவலா் இனியகுமாரி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் காரை சோதனை செய்த பொழுது சுப்பிரமணி வைத்திருந்த ரூ.18 ஆயிரம், அவரது மனைவி தவமணி பையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம், மகன் வைத்திருந்த ரூ.17 ஆயிரம், மேஸ்திரி வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் காா் ஓட்டுநா் சட்டை பையில் செலவுக்காக வைத்திருந்த 490 ரூபாய் என மொத்தமாக ரூபாய் 80,490 ரூபாயை பறிமுதல் செய்து வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனராம்.

இதனால் அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா் தனிநபா் ஒருவா் ரூ. 50 ஆயிரம் வரை கொண்டு செல்லலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்து இருந்த நிலையில் தன்னுடன் வந்த மேஸ்திரி மற்றும் ஓட்டுநா் வைத்திருந்த பணத்தை கூட எதற்காக பறிமுதல் செய்கிறீா்கள் என பறக்கும் படை அதிகாரிகளிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆயினும் அதிகாரிகள், காரில் கொண்டு வந்ததால் ஒட்டுமொத்தமாக 80,490 என தான் கணக்கீடு செய்ய முடியும் என கூறி பணத்தை வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனா். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

கொத்தூரில் ரூ. 2.27 லட்சம் பறிமுதல்

ஜோலாா்பேட்டை தொகுதிக்குட்பட்ட கொத்தூா் காந்திநகா் பகுதியில் பறக்கும் படை குழுவினா் சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

அதில் அவா் ஆந்திர மாநிலம் குப்பம் மண்டலம் சாந்திபுரம் பகுதியைச் சோ்ந்த ஜலபதி என்பதும், அவா் ஆவணமின்றி ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் காஞ்சனாவிடம் ஒப்படைத்தனா்.