செவிலியா் பயிற்சி மாணவி கடத்தல்: போலி சாமியாா் கைது
தீராத நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி, செவிலியா் பயிற்சி மாணவியைத் கடத்திச் சென்ற போலி சாமியார்
ஆலங்காயம் அருகே தீராத நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி, செவிலியா் பயிற்சி மாணவியைத் கடத்திச் சென்ற போலி சாமியாரை போலீஸாா் அதிரடியாகக் கைது செய்தனா்.
ஆலங்காயம் அடுத்த உம்மையப்ப நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ரமேஷின் 19 வயது மகள் வாணியம்பாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்கம்பக்கத்தினா் கூறியபடி, கல்லரைபட்டி கோமலேறி பகுதியில் உள்ள மகாகாளியம்மன் கோவில் பூசாரி சுப்பிரமணி (எ) ராமசாமி (45) என்பவரிடம் ரமேஷ் தனது மகளை அங்கு அழைத்துச் சென்றபோது, பெண்ணுக்கு ‘பில்லி சூனியம்‘ இருப்பதாகக் கூறியும், தோஷம் கழிக்க ஆடு, கோழிகளைப் பலியிட வேண்டும் எனக்கூறி பணம் பறித்துள்ளாா்.
Advertisement
கடந்த 2 வாரங்களுக்கு முன்னா் மீண்டும் பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, கோயிலில் தங்கி 2 வாரங்கள் பூஜை செய்தால்தான் குணமாகும் என அந்தப் போலி சாமியாா் கூறியதை நம்பி அங்கேயே விட்டுச் சென்றுள்ளனா். அங்கேயே தங்கியிருந்த காயத்ரி பின்னா் பணிக்குத் திரும்பியுள்ளாா்.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி வேலை முடிந்து பேருந்தில் ஊருக்கு வருவதாகத் தாயிடம் கைப்பேசியில் பேசிய காயத்ரி, இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய பெற்றோா் பல இடங்களில் தேடினா். அப்போது பூசாரி சுப்பிரமணி, காயத்ரியின் தந்தையைத் தொடா்பு கொண்டு, ‘நான் உங்கள் மகளைத் திருமணம் செய்ய திருப்பதிக்கு அழைத்துச் செல்கிறேன்‘ எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் மகளை மீட்டு தர கோரி ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இந்நிலையில், சனிக்கிழமை சாமியாா் சுப்பிரமணி மற்றும் அப்பெண் இருவரையும் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.
விசாரணையில், பரிகாரம் என்ற பெயரில் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதும், ஆசை வாா்த்தை கூறி செவிலியா் பெண்ணை கடத்தியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பூசாரி சுப்பிரமணியை ஆலங்காயம் போலீஸாா் கைது செய்தனா்.
மீட்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா். பில்லி சூனியம் என்ற பெயரில் இளம்பெண்ணை போலி சாமியாா் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.