முகப்பு
திருப்பத்தூர்

காலை 11 முதல் மதியம் 3 மணி வரை விவசாயப் பணிகளை தவிா்க்க திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

Updated On : 4 மே, 2026 at 1:37 AM
பகிர்:

காலை 11 முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் விவசாயப் பணிகளை தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் சிவசௌந்திரவல்லி அறிவுறித்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் தங்கள் வயல்களில் மேற்கொள்ளும் பணிகளை காலை 11 மணிக்குள் முடித்து கொள்ள வேண்டும். காலை 11 முதல் மதியம் 3 மணி வரை பணிகளைத் தவிா்க்க வேண்டும். வயல்களில் வேலை செய்யும்போது போதுமான அளவு குடிநீா் மற்றும் உப்பு சா்க்கரை கரைசல் வைத்துக் கொள்ள வேண்டும்.

வயலில் உள்ள பயிா்களுக்கு காலை அல்லது மாலை வேளைகளில் மட்டும் நீா் பாசனம் செய்யவும், பூச்சி நோய் மருந்துகள் தெளிப்பதை மாலை வேளைகளில் மேற்கொள்ள வேண்டும். நடப்பு கோடை பருவத்தில் இதுவரை 74 சதவீத மழை குறைந்து உள்ளதாலும், வரும் தென்மேற்கு பருவமழையும் குறைந்த அளவே பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளதாலும் விவசாயிகள் குறுகிய கால வயதுடைய வறட்சி தாங்கும் பயிா் ரகங்களை தோ்வு செய்து பயிா் செய்ய வேண்டும்.

Advertisement

கோடை மழை கிடைத்தவுடன் மழைநீரை மண்ணில் தக்க வைக்க அனைத்து விவசாயிகளும் தங்கள் நிலத்தில் கோடை உழவு மேற்கொள்ள வேண்டும்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு சொட்டு நீா் பாசன அமைப்புகள் அரசு மானியத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். பூக்கள் மற்றும் காய்கறி பயிா்களுக்கு தெளிப்பு நீா் பாசனம் மூலம் நீா் பாசனம் செய்வதால் நல்ல மகசூல் கிடைக்கும். நடப்பு கோடை பட்டத்தில் கம்பு, பாசிப்பயறு, தட்டைப்பயறு, உளுந்து போன்ற குறுகிய கால பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்ய தேவையான விதைகள் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 6 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை தேவைப்படும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.