கும்மிடிப்பூண்டியை அடுத்த நேமள்ளூரை பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மகளிர் கூட்டமைப்பினர் உறுதி ஏற்றனர்.
நேமள்ளூரில் உலக மகளிர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மகளிர் கூட்டமைப்பு தலைவி மரியா மார்க்கரேட் தலைமை வகித்தார். தமிழ்ச்செல்வி, திருமலா, பிரமிளா, ஆர்.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கலைவாணி வரவேற்றார். பொருளாளர் தேவி மகளிர் தினம் குறித்து பேசினார்.
இதில் சமூக சேவை அமைப்பின் தலைவர் மனோகரன், சமூக சேவகர் என்.டி.மூர்த்தி, தேசிய வேளாண் நிறுவன ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன், பாதிரிவேடு மேற்கு நடுநிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கிருஷ்ணம்மா, கனரா வங்கி கிளை மேலாளர் பி.தினேஷ்குமார், சீனிவாசன், அவார்டு தொண்டு நிறுவனர் ஏ.கல்யாணி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். இதில், நேமள்ளூர் ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றுவதற்கு மகளிர் குழுவினர் உறுதி ஏற்றனர். எலிசபெத் நன்றி கூறினார்.