செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹோட்டல்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் 15-ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சிவபிரகாசம் வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.
இதில், ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும், ஹோட்டல், தேநீர் கடைகள், பேக்கரி உள்ளிட்ட கடை உரிமையாளர்களை காவல் துறையினர் இரவு நேரங்களில் மிரட்டுவது மற்றும் இலவசமாக பொருள்களை வாங்கி செல்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்த தீர்மானங்கள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடமும் மனுவாக அளிப்பதாக தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கௌரவத் தலைவர் ரவி, வெங்கடசுப்பு, ஆர்.சீனிவாசன், சகாதேவன், தங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் முன்னாள் செயலாளர் வெள்ளையங்கிரி நன்றி கூறினார்.