கடல் சீற்றம்: பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
பழவேற்காட்டில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்பட்டதால் அப்பகுதி மீனவர்கள் கடந்த 4 நாள்களாக மீன் பிடித் தொழிலுக்குச் செல்லவில்லை.
பழவேற்காட்டில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்பட்டதால் அப்பகுதி மீனவர்கள் கடந்த 4 நாள்களாக மீன் பிடித் தொழிலுக்குச் செல்லவில்லை.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் பழவேற்காடு அமைந்துள்ளது.
கடலோரம் அமைந்துள்ள பழவேற்காட்டில், லைட் ஹவுஸ் குப்பம், கூனங்குப்பம், சாத்தாங்குப்பம், கோரைக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். இங்கு பிடிக்கப்படும் மீன் மற்றும் இறால்கள் வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக, கடந்த நான்கு நாள்களாக இப்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மீன் பிடித்தொழிலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இழப்பீடு வழங்கக் கோரிக்கை...
கடல் சீற்றத்தால் மீன் பிடித்தொழிலுக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடங்கும் மீனவர்களுக்கு, தாற்காலிக நிவாரண உதவித்தொகை அளிக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.