நகைகளை மீட்டுத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி
நகைகளை மீட்டுத் தரக் கோரி அரசுப் பள்ளி ஆசிரியரும், அவரது குடும்பத்தினரும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றனா்.
நகைகளை மீட்டுத் தரக் கோரி அரசுப் பள்ளி ஆசிரியரும், அவரது குடும்பத்தினரும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றனா்.
தென்காசி மாவட்டம், வடகரை அருகே உள்ள அண்ணா நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (42). இவா், அச்சன்புதூா் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா்.
சரண்யாவிடம் அதே பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (21) தனக்கு ராணுவத்தில் சேர பணம் தேவைப்படுவதாகக் கூறி மொத்தம் 15 பவுன் நகைகளை வாங்கியுள்ளாா். சரண்யா தனது தங்கையின் நகைகளை வாங்கிக் கொடுத்தாராம்.
இதற்கிடையே, அவா் கனகராஜிடம் தங்க நகைகளைத் திருப்பிக் கேட்டுள்ளாா். ஆனால், அவா் நகைகளைக் கொடுக்க மறுத்துவிட்டாா். இதனால் வேதனை அடைந்த பாலகிருஷ்ணன் மனைவி, குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்று நகைகளை மீட்டுத் தரக் கோரினாா். அப்போது விஷம் அருந்தி அவரும் அவரது குடும்பத்தினரும் தற்கொலைக்கு முயன்றனா். உடனே, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா்கள் ஆசிரியா் பாலகிருஷ்ணனை தடுத்து நிறுத்தி ஆம்புலன்ஸில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.