மனைவி அளித்த தொடர் தொல்லையால் மன உளைச்சல்: கணவன் விஷம் குடித்து தற்கொலை!
விரக்தியில் மன உளைச்சல் அடைந்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கு...
மனைவி தொடர் தொல்லை அளித்து வந்த விரக்தியில் மன உளைச்சல் அடைந்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கடந்த 3 மாதங்களுக்குப்பின் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கௌஷாம்பி சுற்றுவட்டாரத்தில் வசித்து வந்த ராம்தேவ் என்பவருக்கும் அவரது மனைவி சவிதா தேவிக்கும் இடையே அடிக்கடி சண்டை எழுந்ததாகக் கூறப்படுகிறது. சவிதா தேவிக்கு அப்பகுதியைச் சேர்ந்த ராமு என்பவருடன் திருமண உறவை மீறி நெருக்கமான பழக்கம் இருந்ததாகவும் அதனை ராம்தேவ் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, ராமுவும், சவிதா தேவியும் ராம்தேவை தொடர்ந்து துன்புறுத்தியும் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியும் அவருக்கு கடுமையான மன வேதனையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த விரக்தியில் அவர் கடந்தாண்டு டிசம்பரில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தனது சகோதரர் மரணத்துக்கு அவரது மனைவியே காரணம் என்று அவரது சகோதரர் ரகுநாத் என்பவர் போலீஸில் கடந்த டிசம்பர் 15-இல் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்துள்ள போலீஸார், கடந்த டிசம்பர் முதல் தலைமறைவாகியிருந்த சவிதா தேவியையும் ராமுவையும் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 22) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனநல ஆலோசனை தேவைப்படுபவா்கள் 14416, 14417, 104, 1098, 181 ஆகிய உதவி எண்களைத் தொடா்பு கொள்வது அவசியம்.