திருத்தணி அருகே மதுக்கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினர்.
திருத்தணி பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி மதுபானக் கூடங்களை சிலர் நடத்தி வருவதாகவும், காலை மற்றும் இரவு நேரங்களில் மது பாட்டில்களைப் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, டாஸ்மாக் சென்னை மண்டல மேலாளர் முத்துக்குமாரசாமி, திருவள்ளூர் மேலாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் திருத்தணிக்கு வந்தனர்.
தொடர்ந்து, அருகில் உள்ள காசிநாதபுரம், அரக்கோணம் சாலை, கே.ஜி.கண்டிகை, பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் அவர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அக்கடைகளுக்கு அருகில் கொட்டகை அமைத்து அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த மதுபானக் கூடங்களை ஊழியர்கள் உதவியுடன் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். அவர்களைக் கண்டதும் அங்கு அமர்ந்திருந்த மது அருந்துவோர் ஓட்டம் பிடித்தனர்.
இதனிடையே, பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே பெட்டிக் கடையில் பதுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த 100க்கும் மேற்பட்ட ஆந்திர மது பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மது பதுக்கலில் ஈடுபட்ட ஆறுமுகத்தை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.