பருத்திப்பட்டில் ரூ. 2.06 கோடியில் புதிய பூங்கா: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்
சென்னையை அடுத்த ஆவடி நகராட்சியின் பருத்திப்பட்டு பகுதியில் ரூ.2.06 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காவை உள்ளாட்சித் துறை அமைச்சர்
சென்னையை அடுத்த ஆவடி நகராட்சியின் பருத்திப்பட்டு பகுதியில் ரூ.2.06 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காவை உள்ளாட்சித் துறை அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
ஆவடி நகராட்சியின் 16-ஆவது வார்டான பருத்திப்பட்டில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே அம்ருத் திட்டத்தின் கீழ், ரூ. 2.06 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி கடந்த 2015-இல் தொடங்கப்பட்டது. இப்பூங்காவின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பூங்காவை திறந்து வைத்துப் பேசியது:
அம்ருத் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் மானியமாக ரூ.1 கோடியே 3 லட்சமும், தமிழக அரசின் மானியமாக ரூ.41.20 லட்சமும் ஆவடி நகராட்சியின் பங்களிப்பாக ரூ. 61.80 லட்சமும் பெறப்பட்டு சுமார் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவில் 647 மீட்டர் நீளத்தில் நடைப்பயிற்சிக்கான பாதை, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், 2,900 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைத் தோட்டம், இரண்டு நீரூற்றுகள், 40 இருக்கைகள், வண்ண விளக்குகள், நவீன கழிப்பிடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளில் பூங்கா: ஆவடி நகராட்சிக்கு உள்பட்ட செந்தில் நகர், அந்தோணி நகர், ஆவடி வீட்டுவசதி வாரியம் பகுதி, லாசர் நகர் 2, 5-ஆவது தெரு, பாலாஜி நகர், ஸ்ரீராம் நகர், கவரபாளையம் ஆகிய பகுதிகளில், 2016-17 அம்ருத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் மானியாக ரூ. 2 கோடியே 6 லட்சமும், தமிழக அரசின் மானியமாக ரூ. 82.60 லட்சமும், ஆவடி நகராட்சியின் பங்களிப்பாக ரூ.1 கோடியே 23 லட்சத்திலும் அமைக்கப்பட்டு வரும் பூங்காக்களின் கட்டுமானப் பணி விரைவில் நிறைவடைய உள்ளது.
2017-20 ஆம் ஆண்டுகளுக்கான அம்ரூத் திட்டத்தின்கீழ், ஆவடி நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ரூ. 4 கோடியே 6 லட்சம் மதிப்பில் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர்.
இந்த நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி, எம்எல்ஏக்கள் வி.அலெக்ஸாண்டர், ஆவடி நகராட்சி ஆணையர் சி.எம்.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.