மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு எடுக்க முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செந்தில்வளவன் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
இதில், நீட் தேர்வு பயிற்சிக்கு வகுப்பெடுக்க முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் அவலநிலையைப் போக்க வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட இடமாறுதல் கலந்தாய்வு முழுமையாக நடத்தப்படாததால் மீண்டும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும்.
பதவி உயர்வு மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் என முதுகலை ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்டத் தலைவர் ஓ.ஏ.முரளிதர், கல்வி மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.