மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி
கும்மிடிப்பூண்டி அருகே, பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நடைபெற்ற
கும்மிடிப்பூண்டி அருகே, பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின் பேரில், மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணாவின் பரிந்துரையின்படி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலையில் ஆரம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், தட களம், கபடி, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் கடந்த இரு நாள்களாக நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து புதன்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு ஆரம்பாக்கம் ஊராட்சி செயலாளர் முரளி தலைமை வகித்தார். விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் குப்பன், மாவட்ட பயிற்சியாளர் அனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் வி.பாஸ்கரன் வாழ்த்தினார். தொடர்ந்து, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.