கடலூர் அருகே ரௌடி கொலை: போலீஸார் விசாரணை
புதுச்சேரியைச் சேர்ந்த ரௌடி, கடலூர் அருகே கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த ரௌடி, கடலூர் அருகே கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் தாடி நத்தம் பகுதியில் உள்ள வயலில் உடல் சிதைந்த நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நிகழ்விடத்திற்குச் சென்று பார்த்தபோது, 50க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களுடன் உடல் சிதைந்த நிலையில், முகம் மட்டும் அடையாளம் காணும் வகையில், 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடந்துள்ளது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலமாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி கூராய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர், புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி புகழேந்தி(28) என்பதும், இவர் மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தூக்கணம்பாக்கம் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரௌடியான புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து, மற்றும் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக இவருக்கும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல்வேறு ரௌடிகளுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. எனவே, புகழேந்தி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.