ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை... இருவருக்கு வலைவீச்சு!
ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளியை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளியை வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தையடுத்த கோவிலூர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவர் தெற்கு தேவதானம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்.
இவரது மகன் கூலித் தொழிலாளியான வின்சென்ட்(45). இவர் ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகளுடன் உள்ள பெண்ணை திருமணம் செய்து வசித்து வந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்த நேரத்தில் அங்கு வந்த இரு இளைஞர்கள் வின்சென்ட்டுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டி படு கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
தகவலறிந்து வந்த சேத்தூர் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவல் துறையினரின் விசாரணையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக வின்சென்ட் அதேப் பகுதியைச் சேர்ந்த சின்ன பொண்ணு என்பவருடன் மது அருந்திய போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில், சின்ன பொண்ணுவை வின்சென்ட் அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், இருவரது குடும்பத்திற்கும் முன்பகை நீடித்து வந்த நிலையில், சின்னப்பொண்ணுவின் சகோதரர் ஆனந்தகுமாரும், அவரது நண்பர் கோவர்த்தனன் ஆகிய இருவரும் இணைந்து வீட்டில் இருந்த வின்சென்டை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.