லாரி மீது வேன் மோதியதில் பெண்கள் உள்பட10 பேர் காயம்
திருவள்ளூரில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் பிடித்த காரணத்தால், பின்னால் மீன் ஏற்றி வந்த வாகனம் மோதியதில் மீன்
திருவள்ளூரில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் பிடித்த காரணத்தால், பின்னால் மீன் ஏற்றி வந்த வாகனம் மோதியதில் மீன் வியாபாரிகளான 9 பெண்கள் உள்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரிகள் நாள்தோறும் சென்னைக்கு சென்று மீன்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் 10 மீன் வியாபாரிகள் சென்னை காசி மேடு பகுதியில் மீன் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றனர். இந்த வாகனத்தை தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(25) ஓட்டிச் சென்றார். அங்கிருந்து திங்கள்கிழமை அதிகாலையில் மீன்கள் வாங்கிக் கொண்டு வேனில் திருத்தணி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த வேன் மோதியது.
இதில், வேனில் வந்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல்(55), கோவிந்தம்மாள்(35), எல்லம்மாள்(45), தனலட்சுமி(40), முனியம்மாள்(32), சரசம்மாள்(50), அஸ்வினி(30), லலிதா(30), ரோசா(35), மற்றொரு லலிதா(40) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேன் ஓட்டுநர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.