கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.
டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி கடந்த இரு நாள்களாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கு பெற்றன. இறுதிப் போட்டியில் பஞ்செட்டி வேலம்மாள் பொறியியல் கல்லூரியும், பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியும் பங்கேற்றன.
இதில் 2-1 என்ற செட் கணக்கில் பஞ்செட்டி வேலம்மாள் பொறியியல் கல்லூரி, பெருவாயல் டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரியின் கைப்பந்து அணியைத் தோற்கடித்து முதலிடம் பிடித்தது. 3ஆவது இடம் பகன்னிகைப்பேர் ஜே.என்.என் பொறியியல் கல்லூரி அணிக்கு கிடைத்தது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு டி.ஜே.எஸ் கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பழனி, நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் வரவேற்றனர். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் குமரகுரு வரவேற்றார். நிகழ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வேலம்மாள், டி.ஜே.எஸ். மற்றும் ஜே.என்.என் கல்லூரி கைப்பந்து அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களை டி.ஜே.எஸ் கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கி வாழ்த்தினார்.