காட்டுப்பள்ளி பகுதியில் கடற்கரையோரம் உள்ள மணலைக் கடத்தி வந்த 4 லாரிகளை மீஞ்சூர் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றை ஓட்டி வந்த 4 பேரைக் கைது செய்தனர்.
பொன்னேரி வட்டத்தில் காட்டுப்பள்ளி கிராமம் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது. காட்டுப்பள்ளியில், எண்ணூர் காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, கப்பல் கட்டும் தளம் மற்றும் தனியார் துறைமுகம் ஆகியவை அமைந்துள்ளன. காட்டுப்பள்ளி மற்றும் காளாஞ்சியில் உள்ள கடற்கரையோரப் பகுதிகளில் இருக்கும் மணல் பொக்லைன் இயந்திரம் மூலம் வாரப்பட்டு, லாரிகளில் கடத்திச் செல்லப்பட்டு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீஸார் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வல்லூர் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பள்ளி பகுதியில் இருந்து வந்த 4 லாரிகளை மடக்கி சோதனையிட்டனர்.
அந்த லாரிகளில் கடற்கரையோர மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, மணலுடன் அந்த லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த லாரிகளை ஓட்டி வந்த வினோத்(32), நாகராஜ்(29), செல்வராஜ்(39), ராஜ்குமார்(34) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். லாரி உரிமையாளர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.