திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில், 25 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் பெற தேர்வு செய்யப்பட்டனர்.
இப்பள்ளி வளாகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலம், பிறப்பு முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் உதவி உபகரணங்கள் தேர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹென்றி தலைமை வகித்தார். திருத்தணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரஸ்வதி வரவேற்றார். இதில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் கலந்துகொண்டு, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இதில், மருத்துவர்கள் ராதிகாதேவி, சந்தோஷ் பாலாஜி, பரமகுரு, சகுந்தலாதேவி மற்றும் ரமா ஆகியோர் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். மேலும் மாற்றுத் திறனாளிகளின் மருத்துவ மதிப்பீடு தயார் செய்து, அடையாள அட்டை மற்றும் உபகரணங்களை வழங்க தேர்வு செய்தனர்.
முகாமில், மொத்தம் 100 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 25 மாணவர்கள் உதவி உபகரணங்கள் வழங்கத் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 20 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியர் பயிற்றுநர்கள் சரவணன், தேவிகா, கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுடலைராஜ் நன்றி கூறினார்.