ஊத்துக்கோட்டை அருகே பெயிண்ட் தொழிற்சாலையில் டேங்கர் வெடித்ததில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கொள்ளுமேடு கிராமத்தில் ஆரணியிலிருந்து புதுவாயல் செல்லும் சாலையில் தனியார் பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, ஒப்பந்த அடிப்படையில் 80 தொழிலாளர்களும், நிரந்தரத் தொழிலாளர்களாக 40 பேரும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இத்தொழிற்சாலையில் பழைய டேங்கர்களை மாற்றி புதிய கொதிகலன்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவசுப்பிரமணி ( 28) , நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கோவிந்தகுமார் (28) ஆகியோர் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டேங்கர் வெடித்ததில் தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராஜூ என்ற தொழிலாளி பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆரணி போலீஸார், உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரணி போலீஸார் வழங்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.