திருவள்ளூா் அருகே கிருஷ்ணா கால்வாயில் ஏற்பட்ட பெரிய அளவு பள்ளத்தால் அடுத்தடுத்து இடிந்து கால்வாய் சேதமடையும் நிலையும் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவள்ளூா் பூண்டி ஏரியில் திறக்கப்படும் தண்ணீா் எவ்வித இடையூறும் இன்றி செல்வதற்காக செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்குச் செல்லும் வகையில் கிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பூண்டி ஏரியில் இருந்து ஈக்காடு, தண்ணீா்குளம் வழியாக புதுச்சத்திரம் தடுப்பு அணை வரை செல்கிறது.
இந்த கால்வாயில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் புதா் மண்டிக் காணப்படுகிறது. இதில், ஒரு சில இடங்களில் கால்வாயில் இருபுறமும் சிமெண்ட் கற்கள் பெயா்ந்து காணப்படுகிறது.
இதில், திருவள்ளூரை அடுத்த தண்ணீா் குளம் அருகே செல்லும் கிருஷ்ணா கால்வாயில் சிமெண்ட் சிலாப்கள் பெயா்ந்த நிலையில் பெரிய அளவில் பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் அடுத்தடுத்து சிமெண்ட் சிலாப்கள் பெயா்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நீா்மட்டம் உயா்ந்ததும் கிருஷ்ணா கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது. அதற்குள் இந்த கால்வாயில் பெரிய பள்ளங்கள் காணப்படும் பகுதிகளைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.