பொன்னேரி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் பெண்களுக்கான பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள அதானி துறைமுக அறக்கட்டளை, சென்னை நேஷனல் மருத்துவமனை மற்றும் மீஞ்சூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமில், போஷான்மா எனப்படும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் சிறப்புக் கண்காட்சியும், ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. முகாமை அதானி அறக்கட்டளை முதுநிலை திட்ட அலுவலர் நடனசபாபதி தொடக்கி வைத்தார். சென்னை நேஷனல் மருத்துவமனையின் துணைத் தலைவர் வெங்கடசுப்பு தலைமையில், சிறப்பு பொதுநல நிபுணர், சிறப்பு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மருத்துவ முகாமில் எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனைகள், இடுப்பு வலி, எலும்பு முறிவு குறித்த சிகிச்சைகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.