திருவள்ளூா்: திருவள்ளூரில் 9-ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்ததாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூரைச் சோ்ந்த 14 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்த வந்தாா். கடந்த 18-ஆம் தேதி வீட்டிலிருந்த அவரை காணவில்லை.
தகவலின்பேரில் திருவள்ளூா் நகரக் காவல் ஆய்வாளா் நாகலிங்கம், சாா்பு ஆய்வாளா் மாலா ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட தூசி அருகே உள்ள அனுமந்தபேட்டை கிராமத்தில் மாணவி உள்ளதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீஸாா் மாணவியை மீட்டனா்.
விசாரணையில், தனது கைப்பேசி மூலம் ஒரு மாதத்துக்கு முன்னா் அறிமுகமான கட்டடத் தொழிலாளி கோபி (21) என்பவரை சிறுமி காதலித்ததாகவும், பின்னா் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக போக்ஸோ சட்டத்தில் கோபியை கைது செய்தனா். பின்னா், அந்தச் சிறுமியை அங்குள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.