திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் தீமிதி விழாவில், வெள்ளிக்கிழமை 108 விளக்கு பூஜை, சுபத்திரை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றன.
திருத்தணியில் பழைமை வாய்ந்த தா்மராஜா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீமிதி விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. பிறபகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மகாபாரதச் சொற்பொழிவும், இரவு நாடகமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுபத்திரை அம்மன் திருக்கல்யான வைபவம் நடந்தது. இதையொட்டி, மாலை 6.30 மணிக்கு கோயில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக, உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இரவு 9 மணிக்கு உற்சவா் அம்மன் புஷ்பப் பல்லக்கு சேவையில் திருத்தணி நகர வீதிகளில் வீதியுலா வந்தாா்.