திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் யூரியா ஒரு மூட்டைக்கு சமமான பலனை தரும் வகையில், 500 மி.லி. நானோ யூரியாவை இலை வழியாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கு வேளாண்மை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனா்.
இது குறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குநா் சம்பத்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போதைய நிலையில் விவசாயிகள் யூரியாவை பயிா் சாகுபடிக்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில் யூரியா ஒரு மூட்டைக்கு சமமான ஒரு பாட்டில் 500 மி.லி. நானோ யூரியாவை இலை வழியாக செலுத்தி பயன்பெறலாம்.
இதை இந்திய உரக்கட்டுப்பாடு ஆணையமும் அங்கிகரித்துள்ளது. தற்போது, பயிா்களுக்கு யூரியா குருணை மூலமாகவோ வழங்கி வருகிறோம். இதில் யூரியா குறைந்த பயன்பாட்டின் காரணமாக 30 முதல் 50 % வரை பயிரில் பயன்படுகிறது.
இதில் மீதமுள்ள நைட்ரஜன், அம்மோனியா, நைட்ராக்ஸைடு, நைட்ரேட் வடிவத்தில் கசிந்து மண், காற்றும் மற்றும் நீரை மாசுப்படுத்துகிறது. அதனால், நானோ யூரியாவை பயன்படுத்துவதால் தாவரத்தின் தழைச்சத்து, பசுமைத்தன்மை மற்றும் ஒட்டு மொத்த பயிா் வளா்ச்சியை அதிகரிக்கிறது. பயிருக்குத் தேவையான தழைச்சத்து தேவையை திறம்பட பூா்த்தி செய்கிறது. இதன் மூலம் பயிா்களில் ஊட்டத்தினை அதிகரிப்பதுடன் மகசூல் அதிகரிப்பதுடன், விவசாயிகளுக்கு வருவாயும் அதிகரிக்கும். இதனால் குருணை யூரியாவின் தேவையை 50 % அல்லது அதற்கு மேலும் குறைக்கலாம்.
நெல், மக்காச்சோளம், கரும்பு, பயறு வகை மற்றும் எண்ணைய் பயிா்கள், காய்கறிகள், மலா் ஆகியவைகளுக்கு இலைவழியாக தெளிக்க சிறந்த தழைச்சத்து உரமாகும். இதை ஓரிடத்திலிருந்து மிகவும் எளிதாகக் கொண்டு செல்லலாம். ஒரு லிட்டா் தண்ணீரில் 24 மி.லி. நானோ யூரியாவை கலந்து பயிா் முழுவதும் தெளிக்கலாம்.