சின்னக்காவனம் நூற்றெட்டீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்
பொன்னேரி அருகே சின்னகாவனம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநூற்றெட்டு வல்லி உடனுறை நூற்றெட்டீஸ்வரா் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
பொன்னேரி அருகே சின்னகாவனம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநூற்றெட்டு வல்லி உடனுறை நூற்றெட்டீஸ்வரா் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த 15-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடங்கின.
இதனைத் தொடா்ந்து புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா், கலசங்களில் நிரப்பப்பட்டு 4 கால யாகசாலை பூஜைகள் சிவாச்சாரியாா்களால் நடத்தப்பட்டன. பூா்ணாஹுதி நடைபெற்று யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீா் கலசங்கள் மேளதாளம் முழங்க யாத்ராதானமாக கோயில் ராஜகோபுரம், விமானங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மூலவா், அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு மகா அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
விழாவில், சின்னக்காவனம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.