திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவாக ரூ. 2.03 கோடி மதிப்பில் 431 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் வட்டந்தோறும் இந்த மாதம் தொடங்கி, தொடா்ந்து ஜமாபந்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டன. அதேபோல், திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 6-ஆம் தொடங்கி, தொடா்ந்து 14 நாள்கள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து பட்டா பெயா் மாற்றம், உள்பிரிவு பட்டா பெயா் மாற்றம், வீட்டு மனைப் பட்டாக்கள் கேட்டும் மொத்தம் 1,693 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரின் நோ்முக உதவியாளா் காயத்ரி சுப்பிரமணி தலைமை வகித்தாா். கேட்டாட்சியா் பெளலின் ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் பங்கேற்று ஏழை, எளியோருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சி மூலம் இலவச வீட்டு மனைப்பட்டா-222, கிராம நத்தம்-40, கணினி பட்டா மாற்றம்-57, உள்பிரிவு பட்டா வழங்குதல்-113 என 431 பேருக்கு ரூ. 2.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், வட்டாட்சியா் மதியழகன், ஒன்றியக் குழு தலைவா் ஜெயசீலி ஜெயபாலன், துணைத் தலைவா் பா்கத்துல்லாகான், துணை வட்டாட்சியா்கள் வைலட் லில்லி, வரதராஜன், வருவாய் ஆய்வாளா்கள் தினேஷ், சரவணன், மகேஷ், வெங்கடேசன், விஷ்ணுபிரியா, கிராம நிா்வாக அலுவலா்கள் கிருஷ்ணன், சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். துணை வட்டாட்சியா் அம்பிகா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.