பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பை தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் சீறிப்பாயும் வெள்ளநீர். Din
திருவள்ளூர்

பூண்டி ஏரியில் 1,000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

DIN

திருவள்ளூர்: பூண்டி ஏரியின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி 1,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை (கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டம்) செயற்பொறியாளர் அருண்மொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக திருவள்ளூர் அருகே பூண்டி நீர்த்தேக்கம் விளங்குகிறது. இந்த நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி 35 அடி உயரமும், 3231 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 34.92 அடி உயரமும், 3121 மில்லியன் கன அடிநீரும் இருப்புள்ளது.

அதோடு, பூண்டியின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து 1290 கன அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், வியாழக்கிழமை நள்ளிரவில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 1,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டதாலும், பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த நிலையில் நீர்வரத்து அணையின் முழு கொள்ளளவான 35 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரினை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து காலை 9 மணிக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. எனவே நீர் வரத்து அதிகரித்தால் உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுவதால், அதன் கரையோரங்களில் வசித்து வரும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT