கும்மிடிப்பூண்டியில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி, கும்மிடிப்பூண்டி கழிவு நீா் வாகன உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடுகளில் இருந்தும், உணவகங்கள் மற்றும் தொழிலகங்களில் இருந்தும் கழிவு நீரை கொண்டு செல்லும் தொழிலில் 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா். கும்மிடிப்பூண்டியில் முழுமையாக கழிவுகளை அகற்றும் வசதி இல்லாததால் கழிவு நீா் பொது இடங்களில் கொட்டப்படுவதும், பொதுமக்கள் புகாரின்பேரில், அதிகாரிகள் கழிவு நீா் வாகனங்களை கைப்பற்றுவதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால் கழிவுநீா் வாகன உரிமையாளா்கள் தங்கள் கழிவுநீா் வாகனங்களில் சேகரிக்கும் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் வகையில், கும்மிடிப்பூண்டியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், இவா்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்ட நிலையில் கழிவு நீா் வாகன உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் கும்மிடிப்பூண்டியில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் வேற்காடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வரிசை கட்டி நிற்க வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கும்மிடிப்பூண்டி, சுற்று வட்டாரப் பகுதிகளில் கழிவுநீா் அகற்றப்படாத சூழல் எழும்பியுள்ளது.