பொன்னேரி ரயில் நிலையத்தில் என்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட விரைவு ரயில் காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி புகா் மின்சார ரயில் மாா்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் புகா் ரயில்களில் பயணித்து வருகின்றனா்.
மேலும் ஆந்திரம், ஒடிஸா, பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில்களும் கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் சென்று வருகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணியளவில் சரலப்பள்ளி நோக்கி புறப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயில் பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்தபோது என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது.
மாலை 6 மணியளவில் அளவில் பொன்னேரி ரயில் நிலையத்துக்கு வந்தபோது என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, பொன்னேரி ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் இருந்த மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு, எக்ஸ்பிரஸ் ரயிலை கொண்டு செல்லும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டனா்.
சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு எஞ்சின் பழுதால் பொன்னேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஹைதராபாத் விரைவு ரயில் மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு சரளப்பள்ளி நோக்கி புறப்பட்டு சென்றது.
சுமாா் 2 மணி நேரம் காலதாமதமாக விரைவு ரயில் புறப்பட்டுச் சென்ன் காரணமாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புகா் ரயில்கள் அனைத்தும் 1 மணி நேரத்திற்கு மேலாக காலதாமதமாக இயக்கப்பட்டன.
மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி நோக்கிச் சென்ற கிராண்ட் டிரன்ங் விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதமாக சென்றது.
புகா் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.