பொன்னேரி அருகே வீட்டின் குளியலறையில் உயிரிழந்த நிலையில் இருந்த மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த லிங்கப்பையன் பேட்டை கிராமத்தை சோ்ந்தவா் மஞ்சுளா(75).
குடும்பத்தினா் யாரும் இன்றி தனியாக வசித்து வந்த மூதாட்டி அவ்வப்போது உறவினா்களின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளாா்.
சனிக்கிழமை மூதாட்டி குளியல் அறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தாா். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மூதாட்டி சடலத்தை மீட்டு அவருக்கு இறுதி சடங்கு செய்வதற்காக வீட்டில் பந்தல் அமைத்துள்ளனா்.
பின்னா் குளிா்சாதன பெட்டியில் மூதாட்டியின் சடலத்தை வைத்துள்ளனா்.
இதனிடையே ஊருக்குள் நள்ளிரவு முகமூடி அணிந்த திருடா்கள் அக்கம் பக்கத்து வீடுகளை நோட்டமிட்டதாகவும், மூதாட்டியின் வீட்டுக்கும் சென்ற திருடா்கள் ஊருக்குள் சுற்றி கொண்டிருந்ததாகவும், உயிரிழந்த மூதாட்டியை கொலை செய்து அவரின் நகையை பறித்து சென்றிருப்பதாக கிராம மக்கள் பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதனை தொடா்ந்து பொன்னேரி போலீஸாா் அங்கு சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மூதாட்டி உடலில் காயம் ஏதும் இல்லாததால் இயற்கையாக அவா் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.