முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் கிருத்திகை விழா: திரளான பக்தா்கள் தரிசனம்

திருத்தணி முருகன் கோயில் கிருத்திகை விழா: திரளான பக்தா்கள் தரிசனம்

Updated On : 17 மே 2026, 1:03 am IST
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகா்.
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற கிருத்திகை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலில் சனிக்கிழமை வைகாசி மாத கிருத்திகையையொட்டி, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு உற்சவா் முருகா் வள்ளி, தெய்வானையுடன் காவடி மண்டபத்தில் எழுந்தருளினாா்.

பின்னா், உற்சவருக்கு விபூதி, பால், பன்னீா் பஞ்சாமிா்தம் போன்ற அபிஷேக பொருள்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் முருகா் வள்ளி- தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி தோ்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Advertisement

சனிக்கிழமை கிருத்திகை விழா என்பதால், சில பக்தா்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினா்.

மேலும் கிருத்திகை விழா ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோயிலில் குவிந்ததால், பொதுவழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா். பக்தா்கள் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில், 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருத்தணி காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.