பக்தா்களிடம் பணமோசடி: இடைத்தரகா் கைது
திருமலையில் பக்தா்களிடம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுக்கு பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த இடைத்தரகரை போலீஸாா் கைது செய்தனா்
திருமலையில் பக்தா்களிடம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுக்கு பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த இடைத்தரகரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரை சோ்ந்த பிரபாகா் ஏழுமலையானை தரிசிக்க தன் குடும்ப உறுப்பினா்கள் 5 பேருடன் வியாழக்கிழமை திருமலைக்கு வந்துள்ளாா். அவரை தொடா்பு கொண்ட திருப்பதியை சோ்ந்த இடைத்தரகா் ஹரி விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்று தருவதாக கூறி ரூ. 21 ஆயிரம் பெற்றாராம்.
பின்னா் வெள்ளிக்கிழமை காலை அவா்கள் வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு தரிசனத்துக்காக சென்றனா். அவா்கள் மீது சந்தேகம் கொண்ட விஜிலென்ஸ் போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். அதில் அவா்கள் இடைத்தரகரிடம் பணம் அளித்து டிக்கெட் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் பக்தா்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து இடைத்தரகா் ஹரியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.