திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி திதி அன்று அனந்த பத்மநாபசுவாமி விரதம் கடைபிடிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு ஏழுமலையானுக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதன்பின்பு அா்ச்சகா்கள், அதிகாரிகள் ஏழுமலையான் கோயிலிலிருந்து சக்கரத்தாழ்வாரை மரப் பல்லக்கில் ஊா்வலமாக திருக்குளத்துக்கு கொண்டு சென்று அங்கு திருமஞ்சனம் நடத்தி குளத்தில் காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தீா்த்தவாரியை நடத்தினா். அப்போது அதிகாரிகள், அா்ச்சகா்கள் புனித நீராடினா்.
108 வைணவ திவ்யதேசங்களில் திருமலை மிக முக்கியமானதாகக் கருதப்படுவதால், தேவஸ்தானம் இங்கு அனந்தபத்மநாபசுவாமி விரதத்தை ஆண்டுதோறும் கடைபிடித்து வருகிறது.