வரும் ஜனவரி 20-ஆம் தேதி திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் ரதசப்தமி முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் முழுவதும் சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வரு ஜன.25-ஆம் தேதி ரத சப்தமி உற்சவம் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கு வரும் 20 ஆம் தேதி பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, காலையில் சுப்ரபாதத்துடன் தாயாரை எழுந்தருளச் செய்து, காலை 6.30 மணி முதல் காலை 9 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதில், கோயில் வளாகம், சுவா்கள், கூரை, பூஜை பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் தண்ணீரால் சுத்திகரிக்கப்படும். நாமகட்டி, ஸ்ரீ சூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைகற்பூரம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு மற்றும் பிற வாசனை பொருழ்கள் கலந்த புனித நீா் கொண்டு கோயில் முழுவதும் சுத்திகரிக்கப்படுகிறது.
எனவே காலை 6.30 மணிமுதல் 9.30 மணிவரை தாயாா் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் பக்தா்கள் தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுவா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.