முகப்பு
திருவண்ணாமலை

3 மாணவர்களுடன் இயங்கும் அரசுப் பள்ளி!

ஆரணி ஒன்றியம், முள்ளண்டிரம் ஊராட்சிக்குள்பட்ட மூலத்தாங்கல்

Updated On : 1 அக்டோபர், 2012 at 3:14 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:35 AM

ஆரணி ஒன்றியம், முள்ளண்டிரம் ஊராட்சிக்குள்பட்ட மூலத்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

இப் பள்ளி காமராஜர் முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்டது. பின்னர் 1981-ல் அப்போதைய எம்எல்ஏ ஏ.சி.சண்முகம் முயற்சியில் இப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் இப் பள்ளி அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளியாக செயல்பட்டு வந்தது. பின்னர் சுற்றுப்பகுதியில் தனியார் பள்ளிகள் தொடங்கிய பிறகு இப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.

மூலத்தாங்கல் கிராமத்தில் மட்டும் தற்போது 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் 4 கி.மீ. தொலைவில் உள்ள வெட்டியாந்தொழுவம் மற்றும் 14 கி.மீ. தொலைவில் உள்ள ஆரணி தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இவர்களில் பலர் தனியார் பள்ளி வாகனங்கள் மூலமே பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் உள்ளூர் அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 2012-13ஆம் கல்வியாண்டில் 3 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இதில் ஆ.தேவி 3ஆம் வகுப்பும், ஆர்.நேதாஜி, ஏ.சிவகாமி ஆகியோர் 4ஆம் வகுப்பும் படிக்கின்றனர். பள்ளியில் தலைமையாசிரியர் எம்.கனகா மட்டுமே பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கனகாவிடம் கேட்டபோது, நான் பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக இப் பள்ளியில் இந்த ஆண்டுதான் சேர்ந்தேன். பள்ளியில் 3 மாணவர்கள் மட்டுமே உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

இதையடுத்து ஊரில் உள்ள பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்க்குமாறு கூறினேன். பெற்றோர்கள் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்திருப்பதாகக் கூறினர். இதற்கு நானும் ஆங்கில வழிக் கல்வி அளிப்பதாக உறுதி கூறியுள்ளேன்.

மேலும் மாதந்தோறும் நடைபெறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திலும் வலியுறுத்தி வருகிறேன். கல்வியாண்டு இடையிலும் மாணவர்களை சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளேன்.

ஆனாலும் பெற்றோர்கள் வரும் கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பதாகக் கூறியுள்ளனர் என்றார்.

இப் பள்ளி குறித்து ஆரணி உதவி தொடக்க கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வியிடம் கேட்டதற்கு, இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மேலும் சென்னையில் கல்வித் துறை சார்பில் நடைபெற உள்ள கூட்டத்தில் தெரிவிக்க உள்ளோம். உயரதிகாரிகள் கூறுவதன் அடிப்படையில் செயல்படுவோம் என்றார்.

பெற்றோர்களின் தயக்கத்தைப் போக்கி இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். ஊரில் அரசுப் பள்ளி தொடர்ந்து இயங்க பெற்றோர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.