பொருளாதாரத்தில் உயர திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினர் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே கேட்டுக் கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நலத் துறை சார்பில், சர்வதேச பழங்குடியினர் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பழங்குடியினர் நலத் திட்ட அலுவலர் ப.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
தனி வட்டாட்சியர்கள் ஜி.வேடியப்பன், டி.ஹரிதாஸ், ஆர்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 72 பேருக்கு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகள், 21 பேருக்கு பழங்குடியினர் சாதிச்சான்று ஆகியவற்றை வழங்கினார். பின்னர், ஆட்சியர் பேசியதாவது:
ஜவ்வாதுமலையின் ஒரு பகுதியான ஜமுனாமரத்தூர் திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பகுதி. இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஜமுனாமரத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அறிவித்தார்.
தங்களின் குழந்தைகள் கல்வி கற்கவும், பொருளாதாரத்தில் உயரவும் பழங்குடியினர் ஆர்வம் காட்ட வேண்டும். செம்மரம் கடத்துவது, கள்ளச்சாராயம் விற்பது உள்ளிட்ட தொழில்களை பழங்குடியினர் தவிர்க்க வேண்டும்.
மாற்றம் வர வேண்டும் என்றால், மலைப்பகுதியில் நிரந்தரமாக குடியிருக்கும் நீங்கள், உங்களது குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். கடந்த ஓராண்டில் 15 ஆயிரம் பேருக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில், தமிழக பழங்குடியினர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்து, மாநில பொதுச் செயலர் நடுப்பட்டு கே.ரவி, மாநில இணைச் செயலர் எம்.சரவணன் மற்றும் பழங்குடியினர் அமைப்பின் நிர்வாகிகள், பழங்குடியினர்கள் பலர் கலந்து கொண்டனர்.