விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், இரு பெண்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
திண்டிவனம் அருகேயுள்ள வைரம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 19 பேர், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தேசூரில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு, மினி வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
தென்களவாய் அருகே வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த விஜயகுமாரின் மனைவி கோமதி(36), கமலக்கண்ணனின் மனைவி வெள்ளியம்மாள் (60) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆதிமூலம் மகன் பார்த்திபன் (48), குப்பம்மாள் (65), சிவகாமி(38), மினி வேன் ஓட்டுநரான ராமஜெயம் மகன் பார்த்திபன்(24) ஆகியோர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து மயிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.