வந்தவாசியில் மகன் சாவுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அங்குள்ள பழைய பேருந்து நிலையம் முன் தம்பதியினர் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் (25). இவரது மனைவியை அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் கேலி செய்தனராம். இதுகுறித்து தகவலறிந்த வெங்கடேசன் சென்று கேட்டபோது அவரையும் தாக்கினராம்.
இதைத் தொடர்ந்து, கடந்த 11-ஆம் தேதியன்று வெங்கடேசன் வீட்டின் பின்புறம் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இதையடுத்து, வெங்கடேசனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரைத் தாக்கிய 3 பேர்தான் அவரது சாவுக்கு காரணம் என்றும் வெங்கடேசனின் தந்தை ராஜ் அளித்த புகாரின்பேரில்,
வந்தவாசி தெற்கு போலீஸார் சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வெங்கடேசனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தந்தை ராஜ், தாய் சந்திரா ஆகியோர் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் முன் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றனர். தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸார் அங்கு சென்று அவர்களை தடுத்து நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.