திருவண்ணாமலை

இளைஞர் அடித்துக் கொலை: மாமனார், மைத்துனர் கைது

DIN

செய்யாறு அருகே வரதட்சிணை தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மாமனார், மைத்துனர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் தாட்டிதோப்பு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்கணேஷ் (40). இவர், சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகிய நிலையில், குடும்பப் பிரச்னையால் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டாராம்.
இதனால் செய்யாறை அடுத்த விண்ணவாடி கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் மகள் ஞானசுந்தரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. இந்தத் தம்பதிக்கு பார்கவி (4), அஜீத்குமார் (2) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஞானசுந்தரியின் தங்கைக்கு திருமணம் நடைபெற்றபோது, அவருக்கு அதிகளவில் வரதட்சிணை, சீர்வரிசைப் பொருள்கள் மாமனார் வீட்டில் இருந்து வழங்கப்பட்டதாம்.
இதையடுத்து, அருள்கணேஷ், ஞானசுந்தரியிடம் அவரது தங்கைக்கு அளித்த வரதட்சிணை, சீர்வரிசைப் பொருள்களைபோல, அவரது வீட்டிலிருந்து வாங்கி வரும்படி கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டாராம். இந்நிலையில், விண்ணவாடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு ஞானசுந்தரி வியாழக்கிழமை மாலை வந்தார். பின்னர், மனைவியை அழைத்துச் செல்வதற்காக  அருள்கணேஷ் வியாழக்கிழமை இரவு விண்ணவாடி கிராமத்துக்கு வந்துள்ளார்.
அப்போது, மாமனார் சீதாராமனிடம் சீர்வரிசைப் பொருள்கள் கோரி அருள்கணேஷ் தகராறில் ஈடுபட்டாராம். மேலும், அவர் மறைத்து வைத்திருந்த சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் மாமனாரின் இடது கையில் கிழித்து காயப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீதாராமன் (50), அவரது மகன் மணிகண்டன் (20) ஆகியோர் சேர்ந்து அருள்கணேஷை விறகுக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் அருள்கணேஷ் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருள்கணேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீதாராமன், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT