மங்கலத்தில் டெங்கு தடுப்புப் பணிகள் ஆய்வு
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகளை ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகளை ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகரில் டெங்கு தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆய்வு செய்தார். இதையொட்டி, வீடு, வீடாகச் சென்ற அவர், தேங்காய் மட்டைகள் கொட்டப்பட்டுள்ளதா, வீடுகளில் கழிவுநீர் தேங்கியுள்ளதா, தண்ணீர் தொட்டிகளில் கொசு உற்பத்தியாகியுள்ளதா என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் திட்ட இயக்குநர் ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியதுடன், பள்ளியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் கலக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சு.ராயர், சுகாதார ஆய்வாளர் கே.ஆனந்தன், ஊராட்சிச் செயலர் சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.