ஹிமாசலின் புதிய ஆளுநராக கவிந்தர் குப்தா பதவியேற்பு!
ஹிமாசலில் புதிய ஆளுநர் பதவியேற்பு பற்றி..
லடாக்கின் முன்னாள் துணை ஆளுநர் கவிந்தர் குப்தா ஹிமாசல பிரதேசத்தின் புதிய ஆளுநராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி குர்மீத் சிங் சந்தவாலியா அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பரிமாணமும் செய்துவைத்தார்.
இந்த விழாவில் ஹிமாசல முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, சட்டப்பேரவை தலைவர் குல்தீப் சிங் பதானியா, எதிர்க்கட்சித் தலைவர் ஜெய் ராம் தாக்கூர், பல அமைச்சரவை அமைச்சர்கள், மூத்த சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஹரியாணா ஆளுநர் ஆஷிம் குமார் கோஷ் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக, வந்தேமாதரம் பாடலுடன் விழா தொடங்கியது, அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆளுநருக்குச் சிறப்பான மரியாதை அளிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் பதவியேற்றுக்கொண்ட கவிந்தர் குப்தா, பதவியேற்பு விழாவிற்குச் செல்வதற்கு முன்பு தனது குடும்ப உறுப்பினர்களுடன் பாரம்பரிய பூஜை செய்தார்.
செய்தியாளர்களுடன் உரையாடிய குப்தா கூறுகையில், அரசியலமைப்பு பதவிக்கு நியமிக்கப்பட்டதற்காகக் குடியரசுத் தலைவருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
அரசியலமைப்பின்படி கண்டிப்பாக பணியாற்றுவேன், மாநில அரசுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணுவேன். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என்று அவர் கூறினார்.
முந்தைய ஆளுநர்களால் தொடங்கப்பட்ட முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல பாடுபடுவேன், முன்னுரிமை அடிப்படையில் அவற்றை முடிக்க முதல்வர் மற்றும் மாநில அரசின் ஒத்துழைப்பை நாடுவேன் இவ்வாறு குப்தா கூறினார்.