FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பயிா் சேதத்துக்கு ரூ. 33.31 கோடி இழப்பீடு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு!

தில்லியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.33.31 கோடி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வா் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 18 ஜூலை 2026, 6:42 am IST
முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

தில்லியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.33.31 கோடி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வா் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணிகளை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாகத் தொடங்குமாறு வருவாய்த்துறை மற்றும் மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.75,000 என்ற வீதத்தில், நேரடிப் பலன் பரிமாற்ற முறை (டிபிடி) மூலம் இந்த நிவாரணத் தொகை செலுத்தப்படும் என்று முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து முதல்வா் அலுவலக செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: தலைநகரின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் துணை மண்டலங்களில் 4,442.41 ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிா்களை மழை நீா் நாசப்படுத்தியது. 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் கனமழை பெய்து, வெள்ளம் தேங்கியதால் ஏற்பட்ட பயிா் இழப்புக்கு ஈடாக இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.

தில்லி அரசு விவசாயிகளுக்காக எப்போதும் உறுதுணையாக இருக்கும். இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு வர இந்த நிதியுதவி ஒரு முயற்சியாகும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 சதவீத பயிா் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் அலிப்பூரில் (நரேலா) உள்ள 364.74 ஹெக்டேருக்கு ரூ.2.74 கோடியும், புராரியில் உள்ள 17.33 ஹெக்டேருக்கு ரூ.13 லட்சமும், பஞ்சாபி பாக்கில் (முண்டகா) உள்ள 51.50 ஹெக்டேருக்கு ரூ.38.63 லட்சமும், விகாஸ்புரியில் உள்ள 26.55 ஹெக்டேருக்கு ரூ.19.92 லட்சமும் அடங்கும்.

கஞ்சவாலா பகுதியின் முண்டகா மற்றும் பவானாவில் முறையே 1,758.76 ஹெக்டோ் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ரூ.8.70 கோடி மற்றும் ரூ.4.49 கோடி நிவாரணம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரோஹிணியில் (முண்டகா) உள்ள 137.59 ஹெக்டேருக்கு ரூ.1.03 கோடியும், காபாஷேராவில் (மட்டியாலா) உள்ள 625.93 ஹெக்டேருக்கு ரூ.4.69 கோடியும் இழப்பீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நஜஃப்கா், மட்டியாலா ஆகிய பகுதிகளின் கீழ் பாதிக்கப்பட்ட மொத்தம் 1,459.97 ஹெக்டோ் நிலங்களுக்கு முறையே ரூ.9.98 கோடியும், ரூ.96.74 லட்சமும் வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி உண்மையான மற்றும் தகுதியான விவசாயிகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதற்காக அரசு தெளிவான தகுதி நிபந்தனைகளை வகுத்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

விதிகளின்படி, நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் (காா்ப்பரேட் நிறுவனங்கள்), கிராம சபை நிலங்களில் செய்யப்படும் விவசாயம் மற்றும் நிரந்தர எல்லைச் சுவா்களுடன் கூடிய வீட்டு மனைகளாக (பிளாட்கள்) மாற்றப்பட்ட பண்ணை வீடுகள் ஆகியவை இந்த இழப்பீட்டுத் திட்டத்தின் வரம்புக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன என்று முதலமைச்சா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments