30 வயதுக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோய் பரிசோதனை செய்வது அவசியம்: மருத்துவக் கல்லூரி முதல்வர்
முப்பது வயதுக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.நடராஜன் கூறினார்.
முப்பது வயதுக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.நடராஜன் கூறினார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொது மருத்துவத் துறை சார்பில், உலக நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத் துறைத் தலைவர் ஷகில் அஹமது தலைமை வகித்தார்.
மருத்துவர்கள் சிவக்குமார், சுஜாதா, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கண்காட்சியை தொடக்கி வைத்து, பெண்களும் நீரிழிவு நோயும் என்ற தலைப்பில் பேசியதாவது:
ஒரு குடும்பத்தையே கட்டிக் காப்பவர்கள் பெண்கள்தான். குடும்பப் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டால் அந்தக் குடும்பமே பாதிக்கப்படும்.
எனவே, பெண்கள் தங்களுக்கு நீரிழிவு நோய் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, நடை பயிற்சி, உணவு பழக்க வழக்கங்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். 30 வயதுக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஆரம்ப நிலையியே நீரிழிவு நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால், அதிக பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர்கள் திலகவதி, கமலாதேவி, செவிலியர் சர்மிளா, சுகாதார மேற்பார்வையாளர் பி.கே. ஹரிகிருஷ்ணன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.